“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்
பக்தாதில் இருந்த ஒரு மார்க்க அறிஞரிடம், ஒருவர் அவரது நண்பரை பற்றி ஏதோ கூற வந்தார். உடனே அவரது பேச்சை நிறுத்திய மார்க்க அறிஞர் நீர் இன்னொருவரை பற்றி கூற முன் பின்வரும் மூன்று கேள்விகளுக்கு பதிலளிக்கமாறு கூறினார்.
முதல் கேள்வியாக “நீங்கள் கூற இருக்கும் விடயம் 100% உண்மையானதா?” எனக் கேட்டார். அதற்கு “இல்லை” என பதிலளித்த அவர், அவ்விடயத்தை இன்னொருவரிடம் இருந்து தான் கேட்டதாக கூறினார். அப்படியேனில் நீங்கள் கூற இருக்கும் விடயம் உண்மையா? பொய்யா? எனத் தெரியாது, எனவே இரண்டாம் கேள்விக்கு பதிலளியும் என்றார் மார்க்க அறிஞர்.
“நீங்கள் கூறப் போகும் விடயம் அவரை பற்றி நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்த கூடியதா”? “இல்லை” என்றார் வந்தவர். அவ்வாறாயின் நீர் இன்னொருவரை பற்றிய தவறான விடயத்தை அது உண்மையென உறுதி செய்யாத நிலையில் கூற வந்திருக்கிறீர். இருந்தும் மூன்றாவது கேள்வியை நீர் எதிர் நோக்கலாம் என்றார் அந்த மார்க்க அறிஞர்.
“நீங்கள் சொல்லும் விடயத்தால் எனக்கு ஏதாவது நன்மை கிடைக்குமா?” திரும்பவும் “இல்லை” என்றார் வந்தவர். எனவே உண்மையென உறுதி செய்யாத,எனக்கு ஏதும் நன்மையற்ற, என் நண்பரை பற்றிய தவறான விடயத்தை கூறுவதில் எந்த பிரயோசனமும் இல்லை, ஆகவே அவ்விடயத்தை கூற வேண்டாம் என அம்மார்க்க அறிஞர் பதிலளித்தார்.
இவ்விடயம் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
49:12. நம்பிக்கையாளர்களே! அநேகமாக சந்தேகங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். ஏனென்றால், நிச்சயமாகச் சந்தேகங்களில் சில பாவமானவைகளாக இருக்கின்றன. (எவருடைய குற்றத்தையும்) நீங்கள் துருவித்துருவி விசாரித்துக் கொண்டிருக்க வேண்டாம். உங்களில் ஒருவர் மற்றெவரையும் புறம் பேச வேண்டாம். உங்களில் எவனும் தன்னுடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவானா? அதனை நீங்கள் வெறுப்பீர்களே! (புறம் பேசுவதும் அவ்வாறே. இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பாவத்திலிருந்து) விலகுபவர்களை அங்கீகரிப்பவனும் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.